Saturday, November 28, 2009

காலத்தை வென்ற கவியரசு

"தேரேது? சிலையேது? திரு நாளேது?
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது?"

கவியரசு கண்ணதாசன் எழுத்திலே "பாசம்" படத்தில் பி. சுசீலாவின் இனிமையான குரலிலே வழங்கப்பட்ட பாட்டு.
இது கடந்த வாரம் பொதிகை தொலைகாட்சியில்  காலத்தை வென்ற கவியரசு நிகழ்ச்சியில ஒளி பரப்பாயிற்று. முனைவர் திரு.மோகன் அவர்களால் விளக்கப்பட்டது.

தேர், சிலை, திரு விழாக்கள் இவை அனைத்திற்கும் எதனால் மதிப்பு? தெய்வம் என்ற ஒரு பெரும் சக்தியை மனிதர்கள் கொண்டாடி திரு விழா, தேரோட்டம் இவையெல்லாம் செய்யும் போது தெய்வத்தின் பொருட்டாலே அவை மதிப்பு பெறுகின்றன. தெய்வம் என்ற ஒன்று இல்லாதிருப்பின் அல்லது அதை நாம் சட்டை செய்யாது இருப்பின் இவை யாவும் இருந்தும் இல்லாதது போலத்தானே! இவற்றுக்கு ஏது தனி மதிப்பு?

இதை விளக்கும் போது மேற்கோள் காட்டப்பட்ட சங்க காலப் பாடல் மிகவும் அருமை.

"இளையோர் சூடார், வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணண் சூடான், பாணிணி அணியாள்,
ஆண்மை தோன்ற , ஆடவர்க் கடந்த 
வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ? ஓல்லையூர் நாட்டே "
( பாடிய புலவர்- கீரத்தனார்-புற  நானூறு)

ஓல்லையூர் நாடு முல்லை மலர்கள் பூத்து குலுங்கும் நாடு. அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னன் "வல்வேல் சாத்தன்". போர்க்களத்திலே மிகுந்த வலிமையுடன் வேல் வீசக் கூடியவன். இரப்போர்க்கு இல்லையெனாது வாரி, வாரி, வழங்கும் வள்ளல். கலைகளையும் கலைஞர்களையும் மிகவும் ஆதரித்தவன்.அவனுடைய ஆதரவிலே திளைத்த பாவலர்களும் கலைஞர்களும் தங்களது சந்தோஷமான மனப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக எப்பொழுதும் முல்லை மலர்களை அணிந்து கொண்டும்; முல்லை மலர் எவ்வாறு எல்லா திசைகளிலும் மணம் வீசுகிறதோ அதே போல வல் வேல் சாத்தனின் புகழை பாடி பரப்பிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களது வாழ்வின் ஆதாரம் -மையம் -வல்வேல் சாத்தன். அவன் இருந்தால் அவர்கள் பெருமை பெறுவார்கள்-அவன் இல்லையெனில் வேறு யாதும் இருந்தும் - எதுவும் இல்லாதது போலத்தான்!

ஒரு சமயம் நடந்த போரிலே சாத்தன் வீழ்கிறான்-மாண்டு போகிறான். எங்கும் சோகம். எல்லோர் மனத்திலும் சோகம். யாவும் நின்று போயின.  அந்த நாளிலும் முல்லை பூக்கிறது- ஆனால் அதை சீந்துவோர்தான் இல்லை. இதைதான் புலவர் பாடிச் செல்கிறார் ""இளையோர் சூடார், வளையோர் கொய்யார்,பாணண் சூடான், பாணிணி அணியாள்,வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்,முல்லையும் பூத்தியோ ஓல்லையூர் நாட்டிலே".

இதே கருத்துதான் கவியரசின் மேலே சொன்ன சினிமா பாடலிலும் அவரால் கையாளப்பட்டிருக்கிறது.

No comments: