Monday, November 23, 2009

மார்கழி மாதம்

 சில தினங்களுக்கு முன் எனது தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய ஒரு கடிதத்தில் கையொப்பம் இடுவதற்கு சக அதிகாரி என்னிடம் கோப்புக்களை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் ஒரு இடத்தில் "மங்களமென்று கருதப்படாத மார்கழி மாதத்தில்" என்ற பொருள் தொனிக்கும்  பதப்பிரயோகம் இருந்தது. என் மனதை ஏதோ நெருடியது. அலுவலகங்களில் பல நூற்றுக் கணக்கான கடிதப் போக்குவரத்து இருக்கையில் இம்மாதிரி எழுதுவது என்பது சாதாரணமான சமாச்சாரம்தான். வேறு யாரேனும் எனது இடத்தில் இருந்திருந்தால் கையெழுத்திட்டு இருப்பார்களோ என்னவோ!- தெரியாது . ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடிதத்தை திருப்பி அனுப்பி விட்டேன் - ஒரு சிறு குறிப்புடன் .

நான் எழுதியது  இதுதான் :  "எல்லா மாதங்களைக் காட்டிலும் மார்கழி மாதம்  இறைவழிபாட்டிற்கு ஏற்ற மாதம். மாதங்களில்  நான் மார்கழி என்று கீதையில்  கண்ணன் அருளியிருக்கிறான். ஆண்டாள் திருப்பாவை  பாடி நோன்பு  நோற்றதும் மார்கழியில்தான்.  தன் அன்புக்குரிய காதலியை வருணிக்கும்போது காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி என்று பாடுவதாக கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதியுள்ளார். இவ்வாறிருக்க இச்சொல் பிரயோகம் எனக்கு சரியாகப் படவில்லை. தயவு செய்து மாற்றவும்."

அந்த அதிகாரி மறு முறை இந்த திருத்தங்களுடன் கடிதத்தை அனுப்பினார் - லெட்டர் சென்றது.. அந்த  அதிகாரி என்னை ஒரு உணர்ச்சி வசப்படும் ஆசாமியாக எண்ணியிருக்கக்கூடும். பகவான் கண்ணன், ஆண்டாள் இவர்கள் சொன்னதெல்லாம் விட்டு விட்டால் கூட காதலியைப் பற்றிப் பாடும்  எவரும் எந்த ஒருஅமங்கலப்  பொருளுடனும் ஒப்பு நோக்கி பாட மாட்டார்கள் . நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

No comments: