Saturday, April 16, 2016




செருக்குற்றால் சறுக்குவோம் என்று உணர வேண்டும்.
அவ்வைப் பாட்டி இதை மிக அழகாக சொல்லியிருக்கிறாள் .
சுட்ட பழம் வேண்டுமா அல்லது சுடாத பழம் வேண்டுமா என்ற் இடைச் சிறுவன் கேட்ட கேள்வியால் கர்வ பங்கப் பட்ட தமிழ் பாட்டி பாடி வைத்துப் போயிருக்கிற  பாடல் இதோ:

"கருங்காலிக்கட்டைக்கு  நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு  நாணும் 
அருங்கானில் கார் எருமை மேய்க்கும் காளைக்குத் தோற்றனளே 
ஈரிரவு துஞ்சாது என் கண் "

கானகத்திலே நடந்தது அவ்வைக்கும், இடைச் சிறுவனுக்கும் மட்டுமே தெரியும். வேறு யாரும் பார்க்கவில்லை. அவ்வை இந்த நிகழ்வைப்  பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது-ஆனாலும் தான் கர்வபங்க பட்டதை பாடலாய் பதிவு செய்கிறாள். தான் பெரிதும் கற்றவள், தமிழில் அளவற்ற புலமை தனக்கு உண்டு- இடைச் சிறுவன் தானே என்று  நினைத்தவளுக்கு பெரிய சறுக்கல் அல்லவா- தனது மன நிலையை எவ்வாறு உணர்த்துகிறாள் பாருங்கள்- "ஈரிரவு துஞ்சாது என் கண்"- சாதாரண இதைச் சிறுவனிடம் தோற்றுப் போய் விட்டேன் -இரண்டு நாட்கள் என்னால் உறங்க முடியாது என்று சொல்கிறாள். பெரிய துக்கமோ அல்லது அவமானமோ உண்டானால் நித்திரை நம்மிடமிருந்து விடை  பெற்று விடும்.
தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தனது சம காலத்தவர் மட்டுமில்லாது -தனது காலத்திற்க்கு பிறகு வரப்போகிற பலரும்   அறிய வேண்டும் என்றல்லவா பாடி வைத்து போயிருக்கிறாள் பாட்டி.எவ்வளவு பெரிய மனம் -தவறை ஒத்துக்கொள்வதில் தவறேதும் இல்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறாள் அவ்வை.

No comments: